தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறுவதெல்லாம் எளிது. ஆனால், தயாரிப்பாளராகத் தொடர்ச்சியாகப் படங்கள் கொடுப்பதென்பது அத்தனை சுலபமல்ல. ஒரு படத்தில் வீழ்ந்தால்கூட, மீண்டு எழுவதெல்லாம் இயலாத ஒன்று. பல முறை வீழ்ச்சி கண்டும், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார் கலைப்புலி எஸ்.தாணு.
துப்பாக்கி, தெறி, கபாலி, விஐபி 2 எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் கலைப்புலி எஸ்.தாணு. சமீபத்தில், தனுஷ் நடிப்பில் அசுரன், கர்ணன் என இரண்டு படங்களைத் தயாரித்தார். இரண்டுமே பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் சாதனை படைத்தது. மீண்டும் தனுஷுக்கு ஒரு படம் தயாரித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ‘நானே வருவேன்’ படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், புதிய அப்டேட் என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க இருக்கிறாராம் தாணு. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் முடிந்ததும் புதிய படங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றுமொரு சர்ப்ரைஸ் விஷயம், இரண்டு படங்களில் ஒரு படத்தை சீனுராமசாமி இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – சீனுராமசாமி கூட்டணி இணையும் ஐந்தாவது படமாக அமைய இருக்கிறது. ஏற்கெனவே, இடம் பொருள் ஏவல், மாமனிதன் படங்கள் தயாராகியும் இன்னும் வெளியாக முடியாமல் தவித்துவருவது குறிப்பிடத்தக்கது. தாணு தயாரிக்கும் இரண்டாவது படத்தை யார் இயக்க இருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
தனுஷைப் போலவே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் சேதுபதி. அதனால், தனுஷ் போலவே விஜய் சேதுபதி படமும் வசூலில் பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கிறாராம் தாணு.
**- ஆதினி **
�,