உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு கதாயுதத்துடன் பரிசுக்கான தொகையை அறிவித்துள்ளது ஐசிசி.
ஒன்பது அணிகள் பங்கேற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டிக்காக இந்தியா – நியூசிலாந்து அணிகள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடி பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கதாயுதம் முன்பு உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்தது. இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு இரண்டாவது இடத்தை பெறும் அணிக்கு ரூ.5¾ கோடியும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ.3¼ கோடியும், நான்காவது இடம் வகிக்கும் அணிக்கு ரூ.2½ கோடியும், ஐந்தாவது இடம் பெறும் அணிக்கு ரூ.1½ கோடியும் பரிசாக கிடைக்கும்.எஞ்சிய 4 அணிகள் தலா ரூ.73 லட்சத்தை பரிசாகப் பெறும்.
இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பெறும் அணிக்கு வழங்கப்படக்கூடிய பரிசுத் தொகையை மொத்தமாகச் சேர்த்து இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும். அத்துடன் கதாயுதம் இரு அணிகளின் வசமும் சமமான காலம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
15 பேர் கொண்ட இந்திய அணியில்… 1.விராட் கோலி (கேப்டன்), 2.ரஹானே (துணை கேப்டன்), 3.ரோஹித் சர்மா, 4.ஷுப்மான் கில், 5.புஜாரா, 6.ஹனுமா விஹாரி, 7.ரிஷப் பண்ட், 8.சகா, 9.அஷ்வின், 10.ஜடேஜா, 11.பும்ரா, 12.இஷாந்த் சர்மா, 13.முகமது ஷமி, 14.உமேஷ் யாதவ், 15.முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
**- ராஜ்**
�,