ஒரு சில இயக்குநர்கள் கதை எழுதவும், படம் இயக்கவும் ஒவ்வொரு படத்துக்கு இடையே நீண்ட இடைவெளியை எடுத்துக் கொள்வார்கள். அப்படியான இயக்குநர்களில் ஒருவர் சாந்தகுமார். அருள் நிதி நடிப்பில் வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
மெளனகுரு வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து அடுத்தப் படமான மகாமுனி படத்தைக் கொடுத்தார் சாந்தகுமார். ஆர்யா, இந்துஜா, மகிமா நடிப்பில் இப்படம் வெளியானது. சொல்லப் போனால், மகாமுனி கதையில் முதலில் ஜீவா நடிப்பதாக இருந்தது. ஆனால், கதை எழுதுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஜீவாவுக்குப் பதில் ஆர்யா ஒப்பந்தமானாராம். மகாமுனி வாய்ப்பை தவறவிட்டதால், ‘கதை இருந்தால் சொல்லுங்கள். ஒரு படம் நிச்சயம் பண்ணலாம்’ என்று இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஜீவா.
இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற தவறிவிட்டது. இருப்பினும், உலக அரங்குகளில் இந்தப் படம் சாதனைப் படைத்துவருகிறது. இதுவரை சர்வதேச திரைவிழாக்களில் 9 விருதுகளைப் பெற்றிருக்கிறது. தற்பொழுது நடந்து வரும், ஐரோப்பிய திரைவிழாவில் கலந்துகொண்ட 700 படங்களில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது மகாமுனி.
மகாமுனி பெரிதாக போகவில்லையென்றாலும், சாந்தகுமார் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இப்படம் வெளியான நேரத்தில், மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என்று கூறியிருக்கிறார் ஆர்யா. அதன்படி, சாந்தகுமாரின் அடுத்தப் படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆர்யாவே தயாரிக்கவும் இருக்கிறார்.
ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ , சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ மற்றும் விஷாலுடன் ‘எனிமி’ படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. தொடர்ந்து, நலன்குமாரசாமி மற்றும் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் படம் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆர்யா நடித்து வெளியான டெடி படத்தை இயக்கியவர் சக்தி செளந்தர்ராஜன். இந்த லிஸ்டில் சாந்தகுமாரின் படமும் இணைந்துள்ளது. ஆக, மூன்று இயக்குநர்களுமே கதை உருவாக்கும் ஸ்டேஜில் தான் இருக்கிறார்கள். யார் முதலில் கதையைத் தயார் செய்கிறாரோ அவரின் படத்தை முதலில் துவங்கிவிடும் திட்டத்தில் இருக்கிறார் ஆர்யா.
**- ஆதினி**
�,