Yஐபிஎல்: டெல்லியை வென்ற ராஜஸ்தான்!

entertainment

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 15) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 7ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரில் ப்ரித்வீ ஷா (2 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேற, ஷிகர் தவான் (9 ரன்கள்) நான்காவது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். ராஜஸ்தான் பந்து வீச்சாளர் உனத்கட் பந்து வீச்சில் டெல்லியின் மூன்று தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணி சற்று தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0) ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், லலித் யாதவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை அடித்து 32 ரன்களில் 51 ரன்கள் சேர்த்தார். இது தவிர டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 20 ரன்கள், டாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் உனத்கட் மூன்று விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் – மனன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மனன் வோக்ரா 9 (11) ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் 2 (7) ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 (3) ரன்னிலும், சிவம் துபே 2 (7) ரன்னிலும், ரியான் பராக் 2 (5) ரன்னிலும், ராகுல் திவாடியா 19(17) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தைப் பதிவு செய்திருந்தநிலையில் 62 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் 36 (18) ரன்களும், ஜெய்தேவ் உனத்கட் 11 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் மூன்று விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

**இன்று (ஏப்ரல் 16) மும்பையில் நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.**

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *