சமீப காலமாக விக்ரம் நடிப்பில் பெரிய ஹிட்டென சொல்லும் படி எந்தப் படமும் இல்லை. 2005ல் அந்நியன், 2011-ல் தெய்வத்திருமகள் இவ்விரு படங்களைத் தவிர விக்ரமின் மற்ற படங்கள் பெரியளவுக்கு வெற்றியும் பெறவில்லை. இருப்பினும், தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக, ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான் படங்கள் வெளியானது. தற்பொழுது இவர் கைவசம் நான்கு படங்கள் இருக்கிறது.
ஒன்று, கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் துருவநட்சத்திரம். இரண்டாவது, மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்கும் பொன்னியின் செல்வன். மூன்றாவது, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் கோப்ரா. நான்காவது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் உடன் நடிக்கும் ‘சியான் 60’. இதில், சியான் 60 தவிர மற்ற மூன்று படங்களுமே படப்பிடிப்பு நிலையில் இருக்கிறது.
இதில், இரண்டு பாகங்களாக உருவாகிவருகிறது பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாம். கொரோனா அச்சுறுத்தலின் இரண்டாம் அலை வேகம் கொண்டிருப்பதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் மணிரத்னம். இந்த நேரத்தில் படத்தின் காட்சிகளைப் போட்டுப் பார்த்திருக்கிறார். விக்ரமின் காட்சிகள் மட்டுமே மீதம் எடுக்க வேண்டியதாக இருக்கிறதாம்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு நடுவே கோப்ரா படத்திலும் கவனம் செலுத்திவந்தார் விக்ரம். அதனால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு கேட்ட தேதிகளை விக்ரம் சரியாக கொடுக்கவில்லையாம். கேட்ட தேதிகள் கொடுத்திருந்தால் இந்த நேரத்துக்கு பொன்னியின் செல்வன் முடிந்திருக்கும். அதனால், விக்ரம் மீது கோவத்தில் இருக்கிறார் மணிரத்னம்.
சரி, கோப்ரா முடிந்துவிட்டதா என பார்த்தால் அந்தப் படமும் இன்னும் முடியவில்லை. இதற்கு நடுவே, துருவநட்சத்திரம் படத்தை முடித்துவிடலாம் என விக்ரமிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கும் விக்ரம் தேதி கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஒருவேளை லாக்டவுன் மீண்டும் போட்டால் விக்ரமின் மூன்று படங்களின் ரிலீஸுமே தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் யோசித்துதான் வருத்தப்பட்டிருக்கிறார் மணிரத்னம்.
.�,