தமிழ் சினிமாவின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும் முக்கிய இயக்குநராகி விட்டார் மாரி செல்வராஜ். அதற்குக் காரணம், கர்ணன் ஏற்படுத்தியிருக்கும் பெரும் அதிர்வலைகள்தான்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் படைப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான படம் கர்ணன். கர்ணனாக தனுஷ் மற்றும் எமராஜாவாக மலையாள நடிகர் லால் இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரியேறும் பெருமாள் படத்தில் பேசியதைவிட இன்னும் அழுத்தமாக அரசியல் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். படம் வெளியான அன்று 100% திரையரங்க இருக்கை அனுமதியும், அடுத்த நாளான நேற்று 50% இருக்கை அனுமதியுடனும் படம் திரையாகி வருகிறது. பலகட்ட சிக்கல்கள் இருந்தாலும் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆரதவு கிடைத்துள்ளது.
அதோடு, இந்தப் படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்களும் மாரி செல்வராஜை நேரிலும் , தொலைபேசியிலும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மாரிசெல்வராஜ் இயக்க இருக்கும் படம் குறித்த புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவிவருகிறது.
செய்தி என்னவென்றால், நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து, சூர்யாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால் அப்படியான எந்த விஷயமும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். இருப்பினும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா எனும் தகவல் மட்டும் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
கர்ணன் முடித்திருக்கும் மாரி செல்வராஜ் அடுத்த கட்டமாக துருவ் விக்ரம் நடிக்க ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமொன்று இயக்க இருக்கிறார் அதற்கான முதல்கட்டப் பணிகள் நடந்துவருகின்றன. அதுபோல சூர்யாவுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட, அந்தப் படத்திலிருந்து வெளியான புகைப்படமொன்று வைரலானது. அதைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படம் லைன் அப்பில் வைத்திருக்கிறார் சூர்யா.
இருவருமே அடுத்தடுத்து படங்களை கொண்டிருப்பதால், மாரி செல்வராஜ் – சூர்யா கூட்டணி நடக்குமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
**- ஆதினி**
�,