பரியேறும் பெருமாள் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன், கெளரிகிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 09ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன்.
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் வேகம் கொண்டிருக்கும் நிலையில், கர்ணன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெருமா எனும் சந்தேகம் தயாரிப்பு தரப்பு மத்தியில் நிலவி வந்தது. இருப்பினும், மக்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை ரிலீஸ் செய்தனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியான எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. தமிழ் சினிமாவின் நிலையை கொஞ்சம் சரி செய்தது கடந்த ஜனவரி 13ல் வெளியான விஜய் நடித்த மாஸ்டர். இப்படத்துக்குப் பிறகு திரையரங்கில் அதிக கூட்டம் சேர்ந்தது கார்த்தி நடித்து சென்ற வாரத்தில் வெளியான சுல்தான் படத்துக்கு தான். இவ்விரு படங்களைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய படம் கர்ணன்.
கர்ணன் வெளியான நேற்று 100% திரையரங்க இருக்கை அனுமதியுடனும், இன்றிலிருந்து 50% திரையரங்க இருக்கை அனுமதியுடனும் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழல் நிச்சயம் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியான ஒன்று தான். இருப்பினும், இந்தப் படத்தின் முதல்நாள் கலெக்ஷன் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் 500 திரைகளில் வெளியான கர்ணனின் முதல் நாள் வசூல் சுமார் 10 கோடி என்கிறார்கள்.
சென்னை மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளோடு படம் ஓடியது. கர்ணனோடு, சென்ற வாரம் வெளியான சுல்தான் படமும் மக்கள் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– தீரன்
�,