qதமிழ் சினிமாவிற்கு சுவாசம் தந்த சுல்தான்!

entertainment

தமிழகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு படங்களுக்கு குறைவில்லாமல் வெளியானாலும் மாஸ்டர் படத்திற்கு பின் எந்த படமும் தியேட்டர்களில் கலகலப்பான கூட்டத்தையும்,கல்லாவை நிரப்புகின்ற நிலைமையை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் திரையரங்குகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் சுல்தான், கர்ணன். இதில் சுல்தான் ஏப்ரல் 2 அன்று உலகம் முழுவதும் 2500 திரைகளில் திரையிடப்பட்டிருக்கிறது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

தெலுங்கில் வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு வசூலில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது சுல்தான்’. வெள்ளிக்கிழமை நாகார்ஜுனா நடிப்பில் வெளியான நேரடி தெலுங்கு படமான ‘வைல்டு டாக்’ படம் 1 கோடியே 20 லட்சம் வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படம் 1 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளது. இதனிடையே, படத்திற்குக் கிடைத்த சில எதிர்மறை விமர்சனங்களை ஏற்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

“பெரிய ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. கார்த்திக்கு ‘சுல்தான்’ படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் சிறந்த ஓபனிங் படம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொத்த திரையுலகத்திற்கும் இப்படம் சுவாசம் அளித்துள்ளது. மொத்த ஹவுஸ்புல் காட்சிகளும் எங்கள் இதயத்தில் மகிழ்வை நிரப்பியுள்ளது.

எங்களது பல படங்கள் விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றவை. அவர்களுக்கு எப்போதுமே நன்றி. ஆனால், ‘சுல்தான்’ பற்றி சிலருக்கு வேறு கருத்துக்கள் உள்ளது, அதையும் மதிக்கிறேன். ஆனாலும், வார்த்தைகளில் கொஞ்சம் கண்ணியம் வேண்டும். இது சினிமா தான், ஆனால் ரசிகர்கள் தான் நமது தட்டுக்களுக்கு உணவை அளிக்கிறார்கள்”என எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

தன் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் சம்பந்தமாக விமர்சகர்கள் வைக்கும் எதிர்மறையான கருத்துகளை மௌனமாக கடந்து செல்லும் எஸ்.ஆர்.பிரபு சுல்தான் படம் பற்றிய விமர்சனங்களுக்கு ” ரசிகர்கள் தான் நமது தட்டுகளுக்கு உணவை அளிக்கிறார்கள்” என கூறியிருப்பது எல்லா தரப்பிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி அவரிடம் பேசியபோது, “52 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் சுல்தான். கொரோனா பாதிப்புக்கு பின் சினிமா தயாரிப்பு, திரையரங்கு தொழில்கள் வளமையடைய வாய்ப்பு குறைவு என்றுதான் எல்லோரும் கூறிவந்தனர்

அதனை பொய்யாக்கியது மாஸ்டர், மற்றும் தெலுங்கில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம். இந்த நிலையில்தான் சுல்தான் படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறோம் நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் தமிழகத்தில் 70% திரையரங்குகளில் அரங்கு நிறைந்து சுல்தான் படத்தை ரசிகர்கள் ரசித்து கொண்டாடியிருக்கிறார்கள். முதல்நாள் சுமார் 5 கோடியே 50 லட்ச ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது சுல்தான்.

கொரோனா மறுஅலையில் இந்த வசூல் சாதாரணமானதல்ல. தெலுங்கில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் சுல்தான் படத்திற்கு நியாயமான வசூல் கிடைத்திருக்கிறது. தமிழ் – தெலுங்கு ரசிகர்களுக்கும் படம்பிடித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் படம் பற்றிய விமர்சனங்கள் நேர்மையாக இல்லை என்பதே உண்மை. தியேட்டரில் படம் பார்க்கும் 100 ரசிகரில் 10 பேருக்கு பிடிக்கவில்லை என்பதை பெரும்பான்மை கருத்தாக முன்னிலைப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது அதனால்தான் கோடிகளை முதலீடு செய்து படம் தயாரித்தாலும் அதனை திருப்பி எடுக்க ரசிகர்களிடம் தட்டேந்துகிறோம்” என கூறினேன் என்றார்.

சுல்தான் படம் வியாபார ரீதியாக வெற்றியா என்ற கேள்வியை முன்வைத்தபோது,

“கொரோனாவுக்கு பின் எங்கள் நிறுவனம் ரசிகர்களை நம்பி படத்தை வெளியிட்டோம், அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை. முதலீட்டில் நஷ்டமில்லை லாபத்தில் நஷ்டமடைந்திருக்கிறோம் அடுத்துவரும் நாட்களில் சுல்தான் வசூல் சூறாவளியாக சுழன்றடிக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்குகளுக்கும் நம்பிக்கை தரும்வகையில் பாக்ஸ்ஆபீஸ் வசூல் இருக்கும்” என்றார்

திரையரங்க வட்டாரங்களில் விசாரித்தபோது வசூல் ரீதியாக சுல்தான் வெற்றி படம்தான். தேர்தல் பரபரப்பு, கொரோனா பயம் இவற்றுக்கு மத்தியில்”இரட்டைஇலக்க” டிக்கட்டுகளே விற்பனையாகி கொண்டிருந்த திரையரங்குகளில் மூன்று இலக்கு டிக்கெட் விற்பனை, தியேட்டர்களில் கூட்டத்தை அதிகரித்திருக்கிறது என்கின்றனர் திரையரங்குகள் வட்டாரத்தில்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *