உலகமே நியூ நார்மலில் இருப்பது போல, தமிழ் திரையுலகுக்கு நியூ சிம்பு சமீபத்தில் கிடைத்தார். சிம்பு படமென்றாலே சிக்கலாகும் என்ற வரலாற்றை உடைத்தெறிந்திருக்கிறார் சிம்பு. லாக் டவுன் நேரத்தில் படத்தைத் துவங்கவே பலரும் தயக்கம் காட்டிய நேரத்தில் ஈஸ்வரன் படப்பிடிப்புக்குச் சென்றார்.
பெரிய ஹீரோஸ் படங்களோடு ரிலீஸ் மோதலை எதிர்கொள்ளாத ஹீரோக்களின் மத்தியில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை மாஸ்டருக்குப் போட்டியாக களமிறக்கினார். இனிமேல் நடக்காது என்று பாதியில் விடப்பட்ட ‘பத்து தல’ படத்தை மீண்டும் துவக்கினார். இப்படியான சிம்புவின் சமீபத்திய ஆச்சரியங்களில் ஒன்று மாநாடு.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ்காமாட்சி தயாரிப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் என பல பெரிய நட்சத்திரங்கள் நடிக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் படம் மாநாடு. இந்தப் படத்தின் அறிவிப்பு 2019 சிம்பு பிறந்த தினத்தன்று அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. சிம்பு ‘மகா மாநாடு’ எனும் பெயரில் வேறு படத்தை தயாரித்து இயக்குவதாகவெல்லாம் தகவல்கள் வெளியானது. இறுதியாக, 2020 சிம்பு பிறந்த தினத்தில் கிக் ஸ்டார்ட் ஆனது. அதோடு, கொரோனா வர படப்பிடிப்பும் நின்றுபோனது. எதற்கும் அஞ்சாமல் லாக்டவுன் தளர்வின் போது படப்பிடிப்பைத் துவங்கினார்கள்.
தற்பொழுது அனைத்துக் கட்டப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இந்தப் படத்தின் முக்கிய காட்சியே க்ளைமேக்ஸ் தான். மாநாடு செட்டப்பில் உருவாகும் இந்த காட்சிக்காக 6000 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் கலந்துகொள்ள பெரும் பொருட்செலவில் சென்னை பிலிம் சிட்டியில் சில தினங்களாகப் படப்பிடிப்பு நடந்துவந்தது. சிம்பு உட்பட படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவருமே கலந்துகொண்டனர். சொல்லப் போனால், அரசியல் கூட்டம் போலவே அரங்கு அமைப்புகள், கரை வேஸ்டிகள் என ரியலாக படப்பிடிப்பை நடத்திவந்தார்கள். இரவும் பகலுமாக படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பில் தரையில் சிம்பு படுத்திருந்த புகைப்படமொன்று கூட வைரலனாது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதை இயக்குநர் வெங்கட்பிரபு உறுதி செய்துள்ளார்.
அதோடு, 14 நாட்கள் ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு, 7 நாட்களுக்குள் நடத்தியும் முடித்திருக்கிறார்கள். திட்டமிட்டது ஒன்று. ஆனால், திட்டமிடாத ஒன்றாக படப்பிடிப்பு நடந்துமுடிந்திருக்கிறது. சிம்புவின் இந்த வேகம் திரையுலகை மேலும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
படப்பிடிப்புக்கு நடுவே படத்தின் எடிட்டிங் பணிகளும் தீவிரமாக நடந்துவந்தது. பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் மாநாடு ஓரிரு மாதத்துக்குள் திரையரங்கிற்கு வருமென்று எதிர்பார்க்கலாம்.
– ஆதினி
�,”