ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவது ஊடகங்கள்தான். அதனால் அந்த படைப்பை வெளியிடுவதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் பணிவாகவும், எல்லா நேரங்களிலும் தொடர்பு கொள்ளும் எல்லைக்குள் இருப்பார்கள். படைப்பு பெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களைக் கண்டு கொள்ளாத போக்கை சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி’. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யூடியூப்பில் மட்டும் இந்த பாடல் 98 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி ட்வீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனச் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிக்கையாளர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ரஹ்மானின் மேனேஜர் நோயல் கனடாவில் உள்ளார். அவர் மூலம் தான் எல்லாவற்றையும் தொடர்பு கொள்ள முடியுமாம். அவரிடம் பேசினால் முதலில் வாட்ஸ்-அப் அல்லது மெயில் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அவருக்கு அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே கலைஞர்களைப் பேட்டி எடுக்க ஏற்பாடு செய்வாராம்.
சரி அவர் தான் அப்படி, இந்த பாடலை பாடிய தீயைத் தொடர்பு கொள்ளலாம் என அவரின் தாயாரைத் தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் தருவது கிடையாது. அறிவை கேட்டால் எதுனாலும் நோயலிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். பல மீடியாக்களில் இருந்தும் பல நாட்களாக இந்த பாடல் குழுவினரைத் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லாததால் பத்திரிகையாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
**-இராமானுஜம்**
�,