கொரோனா பாதிப்புக்கு பின் சூர்யா நடித்த முதல் காட்சி !

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தைத் துவங்குவதற்கு முன்பாக, மேகி நூடுல்ஸ் மாதிரி குறுகிய நேரத்தில் தயாராவது போல ஒரு படத்தை முடித்துவிட திட்டமிட்டார் சூர்யா. அவருக்கு ஏற்ற கதையோடு வந்து வண்டியில் ஏறியவர் இயக்குநர் பாண்டிராஜ்.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. கார்த்திக்கு ‘கடைக்குட்டிச் சிங்கம்’, சிவகார்த்திகேயனுக்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ தொடர்ந்து பாண்டிராஜ் கைவண்ணத்தில் சூர்யா நடிக்க பேமிலி டிராமாவாக படம் உருவாகிவருகிறது.
சூர்யாவுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர், சிவகார்த்திகேயனின் டாக்டர் பட நாயகி. இவர்களோடு, சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கியது. சென்னையில் பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டு ஓய்வில் இருந்ததால் சூர்யா வரவில்லை. ஒரு வாரம் மட்டுமே இங்கு படப்பிடிப்பு நடந்தது.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி நடந்துவருகிறது. இந்த ஷெட்யூலில் சூர்யா கலந்துகொண்டு நடித்துவருகிறார். குறிப்பாக, படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கிவருகிறாராம் பாண்டிராஜ். ஆக்ஷன் சீக்குவன்ஸில் நடித்துவருகிறார் சூர்யா. முதலில், ஆக்ஷன் சீக்குவன்ஸ், அவுட் டோர் காட்சிகளை முடிக்க திட்டமாம். அதன்பிறகு, வசனங்கள் இடம்பெறும் பேமிலி சீக்குவன்ஸ் எடுக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். எப்படியும், இந்த மாத இறுதிவரைக்கும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.
சூர்யாவுடன் சத்யராஜ் இணைந்து நடிக்க இருப்பது போல, ராஜ்கிரணும் நடிக்கிறார் எனவும் ஒரு தகவல். அதோடு, சூர்யாவுக்கு வில்லனாக வினய் நடிக்கிறார்.
-ஆதினி