இங்கிலாந்துக்கு எதிரான நாளை (மார்ச் 12) தொடங்கும் டி20 போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாடுவார்களா என்கிற சந்தேகம் தமிழக ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இந்தியா – இங்கிலாந்து இடையே ஐந்து டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வருகிற 12ஆம் தேதி முதல் முறையே 14, 16, 18, 20ஆம் தேதி வரை டி20 உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் நடக்கின்றன. இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
வேகப்பந்து வீரரான நடராஜன் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது நடராஜனுக்கு முழங்கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையில் இருக்கிறார். முதல் போட்டிக்கு முன்பு அவர் காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம்தான்.
அதேபோல் சுழற்பந்து வீரரான வருண் சக்கரவர்த்தி காயத்தில் இருந்து குணமடைந்து உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்தார். முழு உடல் தகுதி பெறவில்லை. அவர் ஏற்கனவே காயம் காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் உடல் தகுதி இல்லாத காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடுபவர்களின் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் யார், யார் விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
**ராஜ்**
�,