ஷங்கர் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியானது. தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்க, தில் ராஜூ தயாரிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தான் அது. இந்திய சினிமாவாக பிரம்மாண்டமாக படம் உருவாக இருப்பதாகச் சொல்லப்பட்டது.
அப்படியென்றால் இந்தியன் 2-வின் நிலை ? ஷங்கர் – ராம்சரண் கூட்டணி துவங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். ஏனெனில், ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடியவே 1 மாதம் மேலாகும். அதைத் தொடர்ந்து ஒரு மாதம் பட புரோமோஷனை முடித்துவிட்டு தான், ஷங்கர் படத்துக்கு வருகிறார் ராம்சரண். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்தியன் 2 படத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர்.
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் வருவதால், களத்தில் மய்யமாக பணியாற்றிவரும் கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் இந்தியன் 2வில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நடுவே, சித்தார்த், காஜல் அகர்வாலுக்கானக் காட்சிகளை முடிக்க இருக்காராம் ஷங்கர்.
இந்நிலையில், புதிதாக ஒரு தகவல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது. சமீபகாலமாக இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்பராஜை காண முடிகிறது. என்னவென்று விசாரித்தால் ராம்சரண் – ஷங்கர் படத்தில் இணைந்திருக்கிறாராம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ராம் சரண் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதும் பணிகளுக்காக ஷங்கருடன் இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்குவதில் கில்லி ஷங்கர். ஆனால், கதை, வசனத்தில் ஷங்கருக்கு பெரும் பலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா. அவரில்லாமல் ஷங்கர் இயக்கிய படங்கள் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இந்நிலையில், அந்த பணிக்காக கார்த்திக் சுப்பராஜைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தியன் 2 பட பணிகளில் ஷங்கர் இருந்தாலும், ராம் சரண் பட வேலைகளை கார்த்திக் சுப்பராஜ் துவங்கிவிட்டார் என்றே சொல்கிறார்கள். ஷங்கருடன் கார்த்திக் சுப்பராஜ் எனும் காம்பினேஷனே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
– தீரன்
�,