சூர்யா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய ஹிட். எந்த அளவுக்கென்றால், திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகியும் மக்கள் கவனத்தை ஈர்த்தது. அதோடு, தற்பொழுது சிறந்த படத்துக்கான ஆஸ்கர் ரேஸிலும் இடம்பிடித்திருக்கிறது.
அடுத்ததாக, சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்க இருக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ செம ஹிட்.. அதே ஸ்டைலில் அதே கூட்டணியில் மீண்டும் ஒரு பேமிலி டிராமாவாக ‘சூர்யா 40’ படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. ஆனால், இந்த விழாவில் சூர்யா கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில் கொரோனா தொற்றினால் சூர்யா பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் ஓய்வில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. நேரடியாக படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் சூர்யா.
சூர்யாவுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படத்தின் நாயகி. படத்தில் முக்கிய ரோலில் சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.
புது அப்டேட் என்னவென்றால், படத்தில் முக்கிய ரோலில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கிறார். சூர்யாவும் ராஜ்கிரணும் கடைசியாக பாலா இயக்கத்தில் 2001-ல் வெளியான நந்தா படத்தில் நடித்தார்கள். 20 வருடம் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சூர்யா 40-ல் முக்கிய ரோலில் ராஜ்கிரண் நடிக்கிறாராம். பொதுவாக, தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பவர் ராஜ்கிரண். இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றால், நிச்சயம் வலுவான கதாபாத்திரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்துக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும், சிறுத்தை சிவா இயக்கும் படமும் சூர்யாவுக்கு லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
** – ஆதினி**�,