மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கவேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த வரலாற்று திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு, ரஹ்மான், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகை ஷாலினி ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதாக படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் சற்று தகர்க்கப்பட்ட பிறகு நடிகர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை தொடங்கியது படக்குழு. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டது. பல முக்கிய காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட்டன. இந்நிலையில் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஏக் லக்கானி கூறியுள்ளார்.
இந்த கடுமையான கோவிட் காலகட்டத்தில் இங்கு பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்று தன் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து நடிகர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்புவார்கள் என தெரிகிறது அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பமாக உள்ளது. அத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு பாகங்களாக ஆறு மாத இடைவெளியில் இரண்டு பாகங்களுமே வெளியாக இருக்கிறது. எப்படியும், அடுத்த வருடம் பொன்னியின் செல்வனை திரையில் எதிர்பார்க்கலாம்.
– ஆதினி
�,”