ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் 60 % ஷூட்டிங்கை முடித்திருந்தது. அதன்பிறகு, கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்துவந்தது. இறுதியாக, கடந்த டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடந்தது. படப்பிடிப்பை விரைந்து முடித்துவிட்டு, அரசியல் அறிவிப்பை புத்தாண்டு அன்று அறிவிக்க இருந்தார் ரஜினி. ஆனால், படப்பிடிப்பும் முடியவில்லை. ரஜினி அரசியலுக்கும் வரவில்லை.
ஹைதராபாத்தில் நடந்துவந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலும், ரஜினியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் படப்பிடிப்பு நின்றது. மருத்துவ அறிவுரையின் படி, ரஜினியும் படப்பிடிப்பை தொடரவில்லை. இனி, படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்துவந்தது. அப்போதுதான், அண்ணாத்த படம், நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பான சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சமீபத்தில் படப்பிடிப்பு குறித்துப் பேச ரஜினியைச் சென்று சந்தித்துவந்தார் சிவா. எப்படியும் ஏப்ரலுக்குப் பிறகுதான் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், நினைத்த நேரத்தை விட முன்னதாகவே படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். ரஜினி நடிக்க அண்ணாத்த படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துவருகிறார். கிராம பின்புலத்தில் குடும்பம் சார்ந்தக் கதையாக ‘அண்ணாத்த’ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, அஜித் நடிக்க சிவா இயக்க விஸ்வாசம் படமும் அப்படியான ஒரு கதையாக பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,