பாகுபலி, பாகுபலி 2 என இரண்டு பிரம்மாண்டப் படைப்புகள் மூலம் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறினார் ராஜமெளலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராஜா காலத்துக் கதையில் வெரைட்டிக் காட்டியிருந்தது பாகுபலி படங்கள்.
தற்பொழுது ராஜமெளலி இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ படம் தற்பொழுது உருவாகிவருகிறது. ‘இரத்தம் ரணம் ரெளத்ரம்’ என்ற இந்த படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் நடித்துவருகிறார்கள். அதோடு, அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துவருகிறார்கள். படத்தின் பணிகள் தற்பொழுது தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. சுமார் 400 கோடியில் இந்தப் படம் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ராஜமெளலியின் அடுத்தப் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். பாகுபலி முடிந்த கையோடு, இந்த கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அப்போது நடக்கவில்லை. மீண்டும் மகேஷ்பாபுவிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்திய களமாக படம் இருக்குமாம். அதோடு, ராஜமெளலியின் படங்களின் கதாசிரியரும், அவரின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்துக்கும் கதை எழுதுகிறாராம். அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் உறுதியாகவில்லை. அப்படி, ஆனதும் ரசிகர்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மகேஷ்பாபுவுக்கு ஸ்பைடர், பாரத் ஆனே நேனு, மகரிஷி, சர்லேறு நீக்கெவ்வறு என தொடர்ச்சியாக படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. தற்பொழுது பரசுராம் இயக்கத்தில் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், ராஜமெளலியுடன் கைகோர்த்தால் நிச்சயம் பெரிய ப்ரேக் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
**- தீரன் **�,