சூர்யாவுக்கு சூரரைப் போற்று படம் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. சிங்கம் 3, தானா சேர்ந்தக் கூட்டடம், என்.ஜி.கே., காப்பான் என தொடர்ச்சியாக வசூல் ரீதியில் பெரிய வெற்றியைத் தராத படங்களைக் கொடுத்துவந்த சூர்யாவுக்கு பெரிய வெற்றியை தந்த படம். அதோடு, திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியிலேயே பெரியளவில் வரவேற்பெல்லாம் சூர்யாவுக்கு நடந்த மேஜிக் தான்.
அடுத்தக் கட்டமாக, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் அண்ணாத்த இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்கும் படம் என கமிட் செய்திருந்தார் சூர்யா. இதில் ஹரி கூட்டணி நடக்க வாய்ப்பில்லை. சிவா இயக்கும் படமும், வெற்றிமாறன் இயக்கும் படமும் கையில் இருந்தது. இப்படங்களுக்கு நடுவே குயிக் மேகி போல, உடனடியாக ஒரு படம் என பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அறிவிப்பு வெளியானது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 40வது படமாக இது உருவாகிறது. சூர்யாவுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர், சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்திருப்பவர். அதோடு, சத்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
பாண்டிராஜ் படமென்பதால் உறுதியாக சொல்லிவிடலாம், இதுவும் கிராமத்து குடும்ப உறவுகள் சாந்த கதை. கார்த்தி நடித்த கடைக்குட்டிச் சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படங்களைப் போலவே இப்படமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.சொல்லப்போனால், கடைக்குட்டிச் சிங்கம் படத்துக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்குமே பெரிதாக கதையில் வித்தியாசம் இருக்காது. ஒரே ட்ரீட்மெண்டாக தான் இருக்கும். இந்தப் படமும் இப்படி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
சூர்யா 40 படப்பிடிப்பு எப்போது என்று விசாரித்தால், பிப்ரவரி 15ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அதோடு, முதல்கட்டப் படப்பிடிப்பானது கன்னியாகுமரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் என்று சொல்கிறார்கள். ஃபேமிலி டிராமாவாக உருவாகும் இப்படத்தை முடித்துவிட்டு, முதலில் சிவா இயக்கும் படத்தை கையில் எடுக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
**- ஆதினி**�,