நடிகர் விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராகிவிட்ட படம் சக்ரா. விஷாலுக்கு நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். தவிர, ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், விஷால் கைவசம் துப்பறிவாளன் 2 படமும், சரவணன் என்பவர் இயக்கத்தில் ஒரு படமும் கையில் இருக்கிறது. இதில், மிஷ்கின் இயக்கத்தில் துவங்கிய படமே துப்பறிவாளன் 2. ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் நடுவில் ஏற்பட்ட கருத்துமோதலால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு பாதி முடிந்திருந்த, இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பையும் விஷாலே கையில் எடுத்தார்.
அதுபோல, மறைந்த தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு அவர்களின் தயாரிப்பில் விஷால் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார். படத்தை துவங்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர் பாலு திடீரென காலமானார். பாலு இல்லாவிட்டாலும் அவர் தயாரிப்பில் படம் நிச்சயம் உருவாகும் என அறிவித்தார் விஷால். அந்தப் படத்தின் இயக்குநர் தான் சரவணன். கதை உருவாக்கும் பணிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவ்விரண்டு படங்களுக்கும் முன்பாக, முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம் விஷால். ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் நடித்தார் விஷால். அந்தப் படம் பெரிய ஹிட். மீண்டும் இந்த கூட்டணி இணையும் என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், விக்ரம் பிரபு நடிக்க புலிக்குத்திபாண்டி படத்தை தொலைக்காட்சியில் வெளியிட இயக்கினார் முத்தையா. வெளியாகி படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
விஷால் காத்திருக்க சொல்லியும், பொறுமை இல்லாமல் விக்ரம்பிரபு படத்தை துவங்கியதால் முத்தையாவுக்கும் விஷாலுக்கும் நடுவே கொஞ்ச காலமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இப்போது, புலிக்குத்திப் பாண்டி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கமர்ஷியலாக ஒரு வெற்றி விஷாலுக்கு தேவைப்படுவதால் முத்தையாவை அழைத்துப் பேசியிருக்கிறார். முத்தையாவும் புதியதாக ஒரு கதையைச் சொன்னதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை உடனடியாக துவங்குவதாக சொல்லப்படுகிறது.
தற்பொழுது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஷால். எனிமி முடித்துவிட்டு முத்தையா படத்தை துவங்குகிறார். இப்படம் முடிந்த பிறகு தான், பாலுவுக்காக சரவணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முத்தையாவிடம் பேசிவிட்டதைப் போல, மிஷ்கினுடனும் இணைவாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
**-ஆதினி**�,