பிரிஸ்பேனில் நடைபெறும் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ‘டிரா’ செய்யும் நோக்குடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 329 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றியுள்ளது .
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (20 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (1 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழை கொட்டியது. அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இறுதிநாளில் எட்டுவது சுலபமல்ல. எனவே இன்றைய கடைசி நாளில் இந்திய வீரர்கள் ‘டிரா’ செய்யும் நோக்குடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 329 ரன்கள் எடுத்து வெற்றியடைந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
பிரிஸ்பேன் மைதானத்தில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்ததில்லை. 1951ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் இலக்கை எட்டியதே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச சேசிங் ஆகும். அதை முறியடித்திருக்கிறது இந்திய அணி.
**-ராஜ்**�,