தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் விஜய்சேதுபதி. அதுமட்டுமல்ல, அதிகப் படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் நடிகரும் இவரே. நடித்தால் ஹீரோ மட்டும் தான் என்றில்லாமல், எந்த ரோலில் வேண்டுமென்றாலும் பொருந்திப் போகும் நடிகர் சேதுபதி.
இந்த பொங்கல் சிறப்பாக, விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் படம் வெளியாகியிருக்கிறது. விஜய்க்கு இணையான ரோலில் விஜய்சேதுபதியும் நடித்திருக்கிறார். பொதுவாக பெரிய ஹீரோ படங்களில் மற்ற நடிகர்களின் நடிப்பு பெரிதாக வெளியில் தெரியாது. ஆனால், மாஸ்டரில் விஜய்சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார்.
தமிழில் எக்கச்சக்கப் படங்கள் வைத்திருக்கும் சேதுபதி, தன்னுடைய சினிமா மார்கெட்டைப் பெரிதுபடுத்த இந்தியிலும் படங்கள் நடிக்க துவங்கியிருக்கிறார். மொத்தம் மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்காராம். அதில் ஒன்று, லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சேது. தமிழில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் தான் இந்தியில் நடிக்க இருப்பதாக தகவல். இரண்டாவது, ஷாஹித்கபூர், மாளவிகா மோகனன் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார்.
ஆனால், இந்தியில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது அமீர் கான் படத்தில் தான். அமீர்கான் நடிக்கும் ‘லால் சிங் சாட்டா’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அமீர்கானே விஜய்சேதுபதியை அணுகினார். பொள்ளாச்சி படப்பிடிப்பில் விஜய்சேதுபதி இருக்கும் போது, நேரடியாக வந்து சந்தித்துவிட்டுச் சென்றார் என்பது கூடுதல் தகவல். இப்போது, இந்த அமீர்கான் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக தகவல். தமிழிலேயே அடுக்கடுக்காகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர், இந்தியிலும் படங்களை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார். தேதிகள் ஒதுக்குவதில் இருக்கும் பிரச்னையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதிக படங்கள் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட் படங்களை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கவில்லை. சினிமா மார்கெட்டை விரிவு படுத்த வேண்டும் என்பது மட்டுமே திட்டம். அப்படி இருக்கையில், இந்தியா முழுவதும் பிரபலமான அமீர்கான் படத்திலிருந்து விலகியது, நிச்சயம் விஜய்சேதுபதிக்கு இழப்பு தான்.
**-ஆதினி**�,