ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டி.இமான் இசையில் படம் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது. கொரோனாவுக்கு முன்பே படத்துக்கான 60% படப்பிடிப்பை முடித்துவைத்திருந்தது படக்குழு. இந்நிலையில், டிசம்பரில் துவங்கி ஜனவரிக்குள் படத்தை முடிக்கலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாலும், ரஜினிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு நின்றுபோனது.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து எப்போது துவங்கும் என விசாரிக்கும் போது, முதலில் பிப்ரவரியில் துவங்கும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், புதிய தகவல் என்னவென்றால், சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறாராம் ரஜினி. எப்படியும் மே மாதம் தேர்தல் வருகிறது என்றால், அண்ணாத்த ஷூட்டிங் ஜூன் அல்லது ஜூலையில் தான் மீண்டும் துவங்கும் என்று சொல்லப்படுகிறது.
படத்துக்கான படப்பிடிப்பு தள்ளிப்போவதென்பது, நிச்சயம் தயாரிப்புத் தரப்புக்கு நஷ்டமே. எப்படி இருந்தாலும், ரஜினி சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது. மேலும், ரஜினியின் உடல்நிலையையும் மனதில் கொண்டு, படப்பிடிப்பைத் தள்ளிப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு.
ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துவருகிறார்கள். அண்ணாத்த படம் தள்ளிப் போவதால், மற்ற நடிகர்கள் புதிய படங்களுக்குத் தேதி ஒதுக்கி விட்டு, மற்றப் படங்களில் நடிக்கக் கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக, அண்ணாத்த ஷூட்டிங் தள்ளிப்போவதால் ஹேப்பியாகியிருப்பது சூரி தான். சூரி ஹீரோவாக நடிக்கும் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு உடனடியாக துவங்குகிறது.
**-ஆதினி**�,