மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கனவுத் திட்டமாக கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைப் படமாக உருவாக்கிவருகிறார் . முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து பகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து, பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் சில நாட்கள் நடந்தது.அதோடு, கொரோனா வந்ததால் படப்பிடிப்பு நின்றுபோனது.
இலங்கையில் படப்பிடிப்பை எடுக்க நினைத்தார்கள் நடக்கவில்லை. இந்தியாவுக்குள் எடுத்துவிடத் திட்டமிட்டார்கள், அதுவும் முடியவில்லை. தமிழகத்துக்குள் முடித்துவிட நினைத்தார்கள் அதுவும் பலனில்லை. இப்படியாகக் கடந்த 2020ல் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்லை. இந்நிலையில், வருகிற ஜனவரி 6ஆம் தேதி முதல் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாகத் துவங்குகிறதாம். மூன்று பிரம்மாண்ட செட்களில் படம் துவக்குவதாகத் தகவல்.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு படத்தில் மிக முக்கிய கேரக்டர். பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி ரோலில் தான் நடிக்கிறார். படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட இளம் நடிகர்கள் இருக்கும் போதிலும், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது சரத்குமார். ஏனெனில், சரத்குமார் தான் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார்.
இன்னொரு சுவாரஸ்யத் தகவல் என்னவென்றால், சில வாரங்களாகப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதில் சரத்குமாருக்கு மேக்கப் போடுவதற்குக் குறைந்தது 3-4 மணிநேரம் ஆகியிருக்கிறதாம். மும்பையிலிருந்து ஒரு மேக்கப் டீம் வந்திருக்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து பேர் சேர்ந்து இவருக்கு மேக்கப் போட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நடிகரின் வீட்டுக்கும் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவக் குழுவையும் அனுப்பி வைத்திருக்கிறார் மணிரத்னம். படப்பிடிப்பு துவங்கும் போது, முழுமையாகப் பரிசோதனை முடித்துவிட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
**-ஆதினி**�,