ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பின்னங்காலில் காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாகத் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே பந்து வீசிய நிலையில் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய தொடரில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் உமேஷ் யாதவின் காயம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். அவருக்குப் பதிலாக கூடுதலாகத் தற்போது இந்திய அணியில் பந்து வீச்சாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆனாலும் சிட்னியில் 7ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்டுக்கான களம் காணும் இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைக்காது என்றும் முதல்தர கிரிக்கெட்டில் அவரை விட அனுபவம் வாய்ந்த ஷர்துல் தாகூர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
**-ராஜ்**�,