w
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மாஸ்டர் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியிடப்படாமல் உள்ளது . இதனால் திரையரங்குகளைத் திறக்கக்கோரி உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் என முக்கிய பிரபலங்கள் நடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகின. எனவே மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா, இல்லை திரையரங்கில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) இதுதொடர்பாக கோவையில் பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ஓடிடியில் படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு இல்லை. திரையரங்குகளைத் திறப்பதற்காக அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அப்போது மாஸ்டர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த அறிவிப்புக்காக நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,