‘வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது’ : மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்!

entertainment

தமிழக திரைத் துறையின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குறித்து நடிகை மீரா மிதுன் அவதூறாகப் பேசி வருவதற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை, நடிகர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் மீரா மிதுன் பதிவிட்டு வருகிறார். சமீப நாட்களாக நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா, சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா ஆகியோர் பற்றியும் அவதூறாகப் பேசி வருகிறார்.

இதனால் ஆத்திரமடையும் விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதுக்கோட்டைப் போலீசில் புகாரும் அளித்துள்ளனர். சூர்யா ரசிகர்களும் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**பாரதிராஜா கண்டனம்**

இந்நிலையில், விஜய், சூர்யா குறித்து அவதூறு பேசுவதற்கு, இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

**மரியாதையுடன் கலைப்பணியாற்றிய காலத்தை கடந்துவிட்டோமா**

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை, ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.

இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுக்கால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !! அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளைக் கடிவாளம் போடாமல் வரம்பு மீறிச் சிதறியுள்ளார்.

திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

**வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது**

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களைச் சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.

வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்… பசியைப் போக்கும்… அவசியமானவைகளாக அவை உதடு தாண்டி வெளிவரட்டும். நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்… நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.

**யாரோ ஒருவனின் அவமானம் தானே?**

தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது? யாரோ ஒருவனின் அவமானம் தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்… அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்… ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பிலிருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை … எழுத்தைக் கூட தேடிப்பிடித்துக் கத்தரி போடுங்கள் நண்பர்களே..

**ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க வேண்டும்**

இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை… தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்… ??! நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கக்கூடாது.

அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட.. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன.

ஒரு அறிக்கைவிட்டாலாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே…

என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

**புகழுக்காக நான் எதுவும் செய்யவில்லை**

இந்நிலையில் பாரதிராஜாவுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மீரா மிதுன், புகழுக்காக நான் எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் மூத்த குடிமகனாக நடந்து கொள்ளுங்கள். என்னை இந்த சமூகத்திற்குத் தவறானவளாக சித்தரிப்பதை நிறுத்துங்கள். ரசிகர் மன்ற தலைவர்கள் என்ற பெயரில் ரவுடிசத்துடன் சமூக வலைதளங்களில் என்னைத் துன்புறுத்துவது பற்றி விஜய் மற்றும் சூர்யாவிடம் கேளுங்கள்” எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *