ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை துத்தி சந்த் தனது பி.எம்.டபிள்யூ காரை விற்பனைக்கு வைத்து பயிற்சி செலவுகளை ஈடுசெய்ய நிதி திரட்டி வருகிறார்.
கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகள் இந்திய விளையாட்டு வீரர்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஒலிம்பிக்கை எதிர்நோக்கி இருந்த விளையாட்டு வீரர்கள் இதன் சுமைகளைத் தாங்கி வருகின்றனர்.
தடகள போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் துத்தி சந்த். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவை பெருமிதம் கொள்ளவைத்தவர் இவர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ தடகள போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். 2019 யுனிவர்சிட் தங்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீரர் இவர் மட்டுமே. ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், 2021ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆனால், ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போன காரணத்தால், இவரது நிதியிருப்பு குறைந்து வந்தது. 24 வயதான இவர், ஒலிம்பிக்கிற்கான ஸ்பான்சர்ஷிப்களும் இனி இல்லை என்றும், அவர் தனது பணத்தை முழுவதுமாக செலவழித்ததாகவும், கடந்த சில மாதங்களாக தான் எதையும் சம்பாதிக்கவில்லை என்பதாலும் தனது பி.எம்.டபிள்யூ காரை விற்க முடிவுக்கு வந்துள்ளார். இந்த நேரத்தில் புதிய ஸ்பான்சர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், பயிற்சியைத் தொடர காரை விற்பது மட்டுமே ஒரே வழி என இது குறித்து கூறியுள்ளார்.
புவனேஷ்வரில் பயிற்சி பெற்று வரும் துத்தி சந்த், ஸ்போர்ட் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில், இது மிகவும் விலையுயர்ந்த கார், நான் ரூ.30 லட்சத்திற்கு இதனை வாங்கினேன். ஆனால், அதன் பராமரிப்பு எனக்கு பிரச்சினையாக உள்ளது. எனவே, பி.எம்.டபிள்யூ காரை விற்க முடிவு செய்துள்ளேன். இதனால் திரட்டப்படும் பணம் மூலம் எனது பயிற்சியைத் தொடர உள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும், தனது பயிற்சியும் அதற்கான செலவுகளையும் குறித்துப் பேசிய அவர், “நான் உணவுக்காக மட்டும் சுமார் ரூ .1 லட்சம் செலவிட வேண்டும். பின்னர் பயிற்சியாளர் மற்றும் பிசியோ உள்ளிட்ட எனது உதவி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பயிற்சியைத் தக்கவைத்துக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாகிவிட்டது. ஒடிசா அரசு எனக்கு வழங்கிய பண ஊக்கத்தொகைகளில் பெரும்பாலானவற்றை நான் எனது பயிற்சியில் செலவிட்டேன். மேலும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், எனது பயிற்சிக்கு நிதியளிப்பது இன்னும் கடினமாகிவிட்டது.
ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் மூலம் நான் மாதத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் மட்டுமே பெறுகிறேன். இது இந்த காலங்களில் போதுமானதாக இல்லை. நிச்சயமாக, நிதி உதவி வழங்க எவருக்கும் இது சவாலான நேரம் தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் லட்சியத்துடன் இருக்கும் ஒரு தடகள வீராங்கனையாக, என்னைச் சுற்றி இருக்கும் விஷயங்களைப் பற்றி ஏமாற்றத்துடன் அமர்ந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறினார்.
2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா தொற்று அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகிர்ந்து கொண்ட துத்தி சந்த், “என்னைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது மிகப் பெரிய அதிர்ச்சியே. ஏனெனில் நான் அனைத்து தீவிரத்தன்மையுடனும் தயாராகி வருகிறேன். COVID-19 வைரஸ் எனது எல்லா திட்டங்களையும் அதள பாதாளத்தில் தள்ளியுள்ளது. மேலும் விரைவாக மீண்டும் எனது பாதையில் திரும்புவதற்கான அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”