மும்பை காவல்துறையினருக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள் வழங்கிய சல்மான் கானுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே நிதியுதவி, சமூகப்பணிகள் என செய்து வருகிறார். திரையுலகின் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது பண்ணை இல்லத்தில் வசித்து வரும் இவர், அருகிலுள்ள கிராமங்களுக்கும் ரேஷன் வழங்கியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களின் வாயிலாக, தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு தனது ரசிகர்களை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரத்தால் சானிடைசர்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிர மாநிலத்தில் தட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மும்பை காவல்துறைக்கு சல்மான் கான் ஒரு லட்சம் சானிடைசர்களை நேற்று(மே 30) நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் சானிடைசர்களை நன்கொடையாக வழங்கிய சல்மானுக்கு நன்றி தெரிவித்தார். அதில், “வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நமது மும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை வழங்கிய சல்மான் கானுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இந்த டிவீட் வெளியானதைத் தொடர்ந்து சல்மான் கான் தனது நன்றியை முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”