wமாநில அரசுக்கு மனசாட்சி இருக்கா? கமல் கோபம்!

entertainment

வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் பசியையும், பட்டினியையும் பொறுத்துக்கொண்டு பல லட்சம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தங்கள் வீடுகளிலேயே இருந்து வந்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவித்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மக்கள் பொறுமை காத்து வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் நேற்று (மே 7) மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு அதிருப்தியும், கோபமும் வரவழைத்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கோபத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஓர் அரசு நமக்கு வாய்த்தது ஏன்?

ஓட்டுக்குக் காசு வாங்கி, ஐந்து வருடங்கள் நம் வாழ்வை இவர்களுக்குக் குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவுதான். பஞ்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்குப் பெயர் “அம்மாவின் அரசா?” தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது?

இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்குப் போகும், பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு. ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என ஐந்து வருடத்துக்கு ஏழைத் தமிழர்களைக் குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தறுவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும் ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இன்று சொல்லுகிறேன். இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.

அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று, பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.

நோய்த் தொற்றுக்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும். கிராமங்களெங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம்.

கொள்ளை நோய் ஒருபக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்.

தாங்குமா தமிழகம்? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கி விட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘அரசுக்கு ஒரு சிறு குறிப்பு’ என்று குறிப்பிட்டு, “இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மை குரல்களுக்குச் செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது . உண்மையில் இது யாருக்கான அரசோ?

இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்” என்று தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *