டிக் டாக் அப்ளிகேஷன் லாக்டவுனில் இருக்கும் பல நாடுகளின் மக்களுக்கு ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது. டிக் டாக்கில் வீடியோ அப்லோடு செய்பவர்கள் மட்டுமல்லாமல், வீடியோ பார்க்க செல்பவர்கள், தொழில்முறையாக திறமையான கலைஞர்களைத் தேடுபவர்கள், புதிய ஐடியாக்களுக்காக பார்ப்பவர்கள் என நாளுக்கு நாள் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணத்தால் கூகிள் பிளேஸ்டோரில் 100 கோடி பேர் இதனை டவுன்லோடு செய்திருக்கின்றனர். இந்த மைல்கல்லை குறுகிய நாட்களில் அடைந்திருக்கிறது.
திரைப்படங்களின் மாற்று வழியாக எப்படி குறும்படங்கள் இருக்கின்றனவோ, அதேபோல சோஷியல் மீடியாக்களில் வெளியிடப்படும் வீடியோக்களின் குறு வடிவமாக டிக் டாக் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. மற்ற சோஷியல் மீடியாக்களில் இல்லாதபடி, சுலபமாக வீடியோ எடிட் செய்து, எஃபெக்ட்கள் சேர்த்து வெளியிடும் இண்டர்ஃபேஸ் சுலபமானதாக இருப்பதால் டிக் டாக் பயன்பாடு என்பது சமூக வலைதளங்களை தனித்துவமாக பயன்படுத்தும் அமெரிக்காவிலும் கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.
உலகளவில் 100 கோடி டிவைஸ்களில் டவுன்லோடு செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் டிக் டாக் அப்ளிகேஷனுக்கு தனி வரவேற்பு எப்போதும் இருக்கிறது. அதிலும், கொரோனா பாதிப்பினை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களைக் கொடுத்து இந்திய மக்களின் நன்மதிப்பினைப் பெற்றது டிக் டாக்.
குறுகிய காலத்தில் டிக் டாக் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும், எட்டிப் பிடித்திருக்கும் உயரமும் கண்டிப்பாக கவனிக்கப்படாமல் இருக்காதல்லவா?
வீடியோ ஸ்ட்ரீமிங் மீடியாக்களின் காட்ஃபாதர் எனப்படும் யூடியூப் விரைவில் டிக் டாக் அப்ளிகேஷனுக்குப் போட்டியாக ‘Shorts’ என்ற அப்ளிகேஷனை வெளியிடவிருக்கிறது. அதன்மூலம் டிக் டாக் அப்ளிகேஷனுக்கு பழகியவர்களை தனது அப்ளிகேஷனுக்கு இழுக்க யூடியூப் நிறுவனம் முயலும். இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் இந்தப் போட்டி விரைவில் திறமையானவர்களுக்கு நல்ல நிழலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
**-சிவா**�,