மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை குறுக்கீடு இருக்காது என்பதால் படப்பிடிப்புகள் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறும்.
தொடர்ச்சியான போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நடிகர் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இடைவெளியின்றி நடைபெற்று வந்தது.
மனம் திருந்திய மைந்தனாக சிம்புவும் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். 80 நாட்கள் மாநாடு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் சிம்பு. மாநாடு படத்திற்காக சிம்பு வாங்கியுள்ள சம்பளம் 8 கோடி ரூபாய். மேலும் 35 நாட்கள் நடிப்பதற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இரு படங்களுக்குமான சம்பளத்தில் 50% முன் தொகையாக சிம்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த இயலாததால் தயாரிப்பாளர்கள் இருவரும் சிம்புவுக்கு கொடுத்த முன் தொகைக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஷூட்டிங் இல்லாததால் சிம்புக்கும் தினந்தோறும் 10 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிற நட்சத்திரங்களின் தேதிகளும் பயன்படுத்த முடியாத நிலை. ‘கொரானோ பிரச்னை முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் போது அனைத்து கலைஞர்களின் கால்ஷீட்களையும் சிம்புவின் கால்ஷீட்டை மையப்படுத்தி ஒருங்கிணைப்பது இடியாப்ப முடிச்சை அறுந்து விடாமல் எடுப்பதற்கு இணையானது’ என்கிறார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
**-இராமானுஜம்**�,