பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைவரும் இன்று(ஏப்ரல் 5) இரவு வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நடிகர் ஜீவா வீடியோ பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் நாடே களமிறங்கி இருக்கிறது. இதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி காலை 9 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ பதிவின் மூலம் மக்களிடம் உரையாற்றினார். இந்திய மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய அவர், தொடர்ந்து ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு டார்ச் லைட், மெழுகுவர்த்தி, விளக்கு அல்லது செல்போன் லைட் என ஏதாவது ஒன்றை ஒளிர விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது இந்த வேண்டுகோள் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. எனினும் பல்வேறு திரை பிரபலங்களும் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். தெலுங்கு நடிகர்களான நாகர்ஜுனா, சிரஞ்சீவி ராம்சரண், பவன் கல்யாண் உள்ளிட்டவர்கள் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். அதேபோன்று மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்களும் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை நாம் ஒற்றுமையாக இருந்து தோற்கடிப்போம். அனைவரும் ஒற்றுமையாக இன்று தீபங்களை ஏற்றுவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் காட்டிய அதே ஒற்றுமையை இன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் அனைவரும் தீபங்கள் ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ அல்லது செல்ஃபோனின் டார்ச் லைட்டை ஔிர வைத்தோ இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையை காட்டுவோம். சமூக விலகலை கடைப்பிடிப்போம், கொரோனாவை வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
**இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”