ரசிகர்களின் கமெர்ஷியல் ஆர்வத்துக்கு தீனி போட சில படங்களிலும், தனது நடிப்பு வெறிக்கு தீனி போட சில படங்களிலும் நடிப்பது சூரியாவின் வழக்கம். அந்த வகையில், காப்பான்-என்.ஜி.கே-சூரரைப் போற்று ஆகிய படங்களில் தனக்காக நடித்து முடித்த சூர்யா, அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் ‘அருவா’திரைப்படத்தில் இணையும் தகவல் வெளிவந்ததிலிருந்தே, இந்தப் படத்தின் ஹீரோயின் யாராக இருக்கும் என்ற கேள்வி சூர்யா ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி ஹீரோயின்கள் பெயர் அருவா படத்தில் நடிப்பதாக பேசப்பட்டாலும், படக்குழுவினரிடமிருந்து எவ்வித உறுதியான தகவலும் வெளிவரவில்லை. சூர்யா-ஹரி படங்கள் பொதுவாகவே ஹீரோவையும் வில்லனையும் சுற்றியே நகரும் என்பதால், கேரக்டருக்கு முக்கியத்துவம் கேட்கும் நடிகைகள் பலரும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, வேறு மொழியிலிருந்து நடிகைகளைக் கொண்டுவர திட்டமிட்டு நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேசப்பட்டதாக சமீபகாலமாக சில தகவல்கள் வெளியாகின.
மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கில் படு பிஸியாக வலம் வந்தாலும் பூஜா ஹெக்டே இந்தித் திரையுலகத்திலும் அவ்வப்போது தலைகாட்டிவந்தார். இந்நிலையில், அவர் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அவரது இந்தித் திரையுலக வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அதனால் தான், தானாக முன்வந்து எந்தத் தமிழ்ப் படத்திலும் நான் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.
அருவா படத்தில் கமிட் ஆகியிருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துள்ள பூஜா “நான் தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து நீங்களாக ஒரு முடிவுக்குள் குதிக்கவேண்டாம். இப்போது வரையில் நான் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. சில கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றில் நடிக்கவேண்டுமா என முடிவெடுக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக இந்த வருடத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.
பூஜா ஹெக்டேவிடம் இரண்டு தமிழ் கமெர்ஷியல் படங்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சூர்யாவின் அருவா திரைப்படம். ஆனால், தெலுங்கில் பிசியாக இருக்கும் பூஜாவுக்கு சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘அல வைகுந்தபுரமுலு’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. இதனால், பிரபாஸுடன் இணைந்து ‘ஜான்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக வளரும் நேரத்தில், தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்துவரும் சூர்யாவுடன் இணையவேண்டுமா என்ற முடிவை பூஜா எடுத்தாகவேண்டும்.
**-சிவா**�,