கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க அரசு சொல்வது படி நாம் கேட்டு நடக்க வேண்டும் என்றும், முருகபெருமான் நம்மைக் காப்பாற்றுவார் என்றும் நடிகர் யோகிபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்களும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மக்களிடையே கொரோனா குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக நடிகர் யோகிபாபுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி யோகி பாபு-மஞ்சு பார்கவி தம்பதியரின் திருமணம் மிக எளிமையாக நடத்தப்பட்ட நிலையில் மார்ச் மாதம், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் மார்ச் 31ஆம் தேதி திருமண வரவேற்பு என அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்திரிகை அச்சடித்து பிரபலங்களுக்கு யோகி பாபு வழங்கி வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு யோகி பாபு பத்திரிகை அளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது திருமண வரவேற்பை யோகி பாபு தள்ளிவைத்துவிட்டார்.
இந்த சூழலில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த வைரஸிடம் இருந்து நாம் எல்லோரும் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்றால், நம் பிரதமர் சொன்ன மாதிரி, முதலமைச்சர் சொன்ன மாதிரி, ஊரடங்கு உத்தரவுப் படி நாம் எல்லோருமே காவல்துறைக்கு சப்போர்ட் பண்ணனும். ஏனென்றால் பல இடங்களில் நிறைய உயிர்கள் இந்த வைரஸின் காரணமாக போய்க்கொண்டிருக்கிறது. இனி ஒரு உயிர் கூட இதனால் போகக்கூடாது. அதற்கு நாம் எல்லோரும் அரசு சொல்லும் விஷயத்தை கடை பிடிக்கணும். வீட்டிலேயே இருக்க வேண்டும். நாம எல்லாரும் இதைப் பண்ணா இந்த வைரஸிடம் இருந்து நாம் எல்லோருமே தப்பித்துக்கொள்ளலாம்.
Please Take Care 🙏🏻#COVID19outbreak pic.twitter.com/QiIxnkEao5
— Yogi Babu (@iYogiBabu) March 28, 2020
அது மட்டும் இல்லாமல், இதை எல்லாம் தாண்டி, நான் வணங்கும் முருகப் பெருமான் வந்து கண்டிப்பா இந்த வைரஸிடம் இருந்து நம்மை காப்பாற்றுவார். எல்லா தெய்வங்களும் சேர்ந்து நம்மை காப்பாற்றும். தெய்வங்களை வணங்குவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவிற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், “முருகப்பெருமான் காப்பாத்துவாரோ இல்லையோ…நம்மல காப்பாத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள் இருக்காங்க அண்ணா. இவங்க தான் நமது கடவுள்” என்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் சேதுபதி “மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும், மேல இருந்து எதுவும் வராது” என பேசியிருந்தார். அதற்கு நேர் எதிர் கருத்துடன் யோகி பாபு தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”