~‘முதுகில் குத்திவிட்டார்’: தலைவி தந்த அவமானம்!

entertainment

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவி திரைப்படத்தால் தனக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாக எழுத்தாளர் அஜயன் பாலா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ திரைப்படம் உருவாகிவருகிறது. கங்கணா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோரது தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப்படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்திலும், பூர்ணா சசிகலா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘தலைவி’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் 26-ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக எழுத்தாளர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “சினிமாவில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும், தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் அதனை ஆதாரமாக பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கி விட்டார்கள்.

வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவரம் என ஒன்றரை வருட என் உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகுக்குத்தல்தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போது கூட இதுபற்றி வாய்திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல. இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கி கொடுக்கமாட்டார்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் ஒப்பந்தமில்லாமல் யாரும் பணிபுரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக் கொள்ளும் கோரிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(பிப்ரவரி24) ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் அதில் எழுத்தாளர் அஜயன் பாலா பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.

எழுத்தாளர் அஜயன் பாலாவின் பதிவைப் பார்த்த தலைவி படத் தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்து, பிரச்னையை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் இந்தப் பதிவை நீக்கியிருப்பதாகவும், அந்த சந்திப்பு முடிந்த பின்னர் அனைவரையும் தொடர்புகொள்வதாகவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *