அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா ஸ்டேடியத்தில் இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (பிப்ரவரி 24) குஜராத் மாநிலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நமஸ்தே ட்ரம்ப் என்று மூன்று முறை முழங்கி, அகமதாபாத்தில் நடந்துவரும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றத் தொடங்கினார். அவர் பேசும்போது, “இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு ட்ரம்ப் கூறியது போன்றே நீண்டகாலம் நிலைத்து நிற்கும். இன்று இந்த ஸ்டேடியத்தில் புதிய சரித்திரம் படைக்கப்படுகிறது. 5 மாதங்களுக்கு முன்னர் நான் அமெரிக்காவிற்கு ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றேன். இன்று என் நண்பர், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்து ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து உலகின் மிகப்பெரிய குடியரசு நாட்டிற்கு உங்களை மிகவும் வரவேற்கிறேன். நீங்கள் வந்திறங்கியது குஜராத்தில் தான் ஆனால் மொத்த இந்திய நாடும் உங்களை ஆர்வமுடன் வரவேற்கிறது. பல மொழி, பல கலாச்சாரம் என பன்முகத்தன்மை கொண்ட எங்கள் நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களையும், அவரது மனைவி மெலினியா ட்ரம்ப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘நமஸ்தே’ என்ற பெயர் ஆழமான பொருள் கொண்டது. இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து வந்த ஒரு வார்த்தை. இதன் பொருள், அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்பது தான். இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் தங்களுக்குள் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. அதில் லட்சியங்கள், புதுமையான சிந்தனைகள், வாய்ப்புகள், சவால்கள், நம்பிக்கை மற்றும் திட்டங்கள் போன்றவை அடங்கும்.
அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா இந்தியா வருகை தந்துள்ளது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாட்டை உருவாக்க நீங்கள் செய்த பணி சிறப்பானது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்கான உங்கள் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. இந்த நிகழ்ச்சி அமெரிக்கா-இந்தியா இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்தியா-அமெரிக்கா உறவு இனிமேலும் வெறும் ஒப்பந்த உறவாக மட்டும் இருக்காது. இது மேன்மை மிக்க நெருக்கமான உறவாக மாறிவிடும். ஒரு நாடு சுதந்திர மக்களுக்கானது, மற்றொன்று உலகம் ஒரே குடும்பம் என்று நம்புகிறது. ஒரு நாடு ‘சுதந்திரதேவி சிலை’ பற்றி பெருமிதம் கொள்கிறது, மற்றொரு நாடு ‘ஒற்றுமையின் சிலை’ பற்றி பெருமிதம் கொள்கிறது.” என்று கூறினார்.
�,