விஜய்யின் திரைப்படங்களுக்கு ரிலீஸாகும்போது பிரச்சினை ஏற்பட்டு பார்த்திருக்கிறோம். ஆனால், படம் உருவாகும்போதே பிரச்சினை என்றால் அது மாஸ்டர் திரைப்படத்துக்குத்தான். நெய்வேலி ஷூட்டிங்குடன் இந்த பிரச்சினைகள் முடியும் என்று பார்த்தால், அது பூந்தமல்லி வரை நீள்கிறது.
சனிக்கிழமை இரவை இந்த உலகமே கொண்டாட்டமாக கடந்து சென்றதுபோல, கோடம்பாக்கமும் இனிமையுடன் கடந்து சென்றிருக்கிறது. தங்களது தொழிலின் நிலை குறித்தும் வளர்ச்சி குறித்தும் சினிமாவின் பெரும்புள்ளிகள் இணைந்து வார இறுதியில் பேசுவது வழக்கம். அப்படிப் பேசிய சமயத்தில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது மாஸ்டர் திரைப்படத்தின் **மாட்டுக்கறி அரசியல்.**
நெய்வேலியில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு அடுத்தபடியாக மாஸ்டர் படக்குழு முகாமிட்டிருக்கும் இடம் பூந்தமல்லி EVP ஃபிலிம் ஸ்டூடியோவுக்கு எதிரே உள்ள காலி குடோன். அடுத்த 10 நாட்களுக்கான ஷூட்டிங்கை இந்த இடத்தில் தான் நடத்தப்போகிறது மாஸ்டர் படக்குழு. அந்த ஷூட்டிங்கில் பயன்படுத்தவிருக்கும் சில பொருட்களை ஏற்றிச்சென்றபோது ஏற்பட்ட சம்பவம் தான் மாஸ்டர் படத்தைப் பற்றி பேச வைத்திருக்கிறது.
முதலில் இந்த சம்பவம் வெளியில் வந்தது எப்படி என்று விசாரித்தபோது “மாஸ்டர் திரைப்பட ஷூட்டிங்குக்கான பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை, டிராஃபிக் போலீஸ்காரர்கள் மடக்கி ஆவணங்களை பரிசோதித்திருக்கின்றனர். அப்போது அதிலிருந்த மாட்டுக்கறிக்கான விற்பனை ரசீதைக் கேட்டபோது, இதெல்லாம் டூப்ளிகேட் சார். ஷூட்டிங்குக்குக் கொண்டுபோறோம் என்று டிரைவர் ஆர்டர் காப்பியைக் காட்ட, சிரித்துக்கொண்டே அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சுவாரசியமான நிகழ்வினை போலீஸ்காரர்களுக்குள் பகிர்ந்துகொள்ள, மாஸ்டர் படத்தில் மாட்டுக்கறி தொடர்பான காட்சிகள் இருக்கும் தகவல் வெளியில் தெரியத் தொடங்கியது. மாநில ஆளுங்கட்சிக்கு விஸ்வாசமான ஒரு காவல் அதிகாரி, இதனை மத்திய ஆளுங்கட்சியின் தமிழக நிர்வாகி ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்ய என்ன விஷயம் என்று திரையுலகில் விரிவாக விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதன் மூலமாகவே திரையுலகினர் பலரும் இதனை பரபரப்பாக பேசவும் விசாரிக்கவும் தொடங்கியிருக்கின்றனர்” என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதி மாட்டுக்கறி ஏற்றுமதி தொழில் செய்யும் நபராகவும் இருக்கிறார். அவரை விஜய் நேருக்கு நேர் பார்க்கும் ஒரு காட்சியில் தான், அந்த பொம்மை மாட்டுக்கறியையும் அவை குறித்து விஜய்-விஜய் சேதுபதிக்கு இடையே நடைபெறும் சிறு விவாதத்தையும் பயன்படுத்துகின்றனர். இந்தக் காட்சி மற்றும் விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் நடைபெறும் சில டிராமாக்களையும் அடுத்த 10 நாட்களுக்கு ஷூட்டிங் எடுக்கப்போகிறார்கள் என்கின்றனர் படக்குழுவினர்.
�,