நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், 25 திரைப்படங்களில் நடித்து நிறைவு செய்ததை மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.
2012-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த ‘போடா போடி’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. தொடர்ந்து விஜய், தனுஷ், விஷால், விஜய் சேதுபதி, மாதவன் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவரது வித்தியாசமான, துணிச்சலான நடிப்பு இவருக்குப் பெரும் பாராட்டுகளை வாங்கித்தந்தது. இந்தநிலையில் 25-ஆவது திரைப்படத்தில் நடித்து திரை வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள வரலட்சுமி இது தொடர்பாக ஒரு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இது மிக நீளமான, மிகவும் கடினமான பயணமாக இருந்தது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள். அது எனது விஷயத்தில் உண்மை. ஆனால் கனவுகள் கண்டிப்பாக ஒரு நாள் நிஜமாகும். எனது முழு திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை எட்ட பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். இப்போது நான் 25 படங்களை முடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது அது எனக்குப் பெரிய அளவுகோலாகத் தெரிகிறது.
என்ன நடந்தாலும் என்னுடன் நின்ற, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என்னுடன் நின்று எனது ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் தான் என்னை இன்னும் வலிமையாக்கியது. உங்களைத் தவறு என்று நிரூபிக்க இன்னும் பிடிவாதம் பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்த, அன்பு காட்டிய, என்னுடன் வளர்ந்த என் அன்பார்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.’ என்று தெரிவித்துள்ளார்.
Thank you for all the love ❤️ pic.twitter.com/cm5I9f74wv
— varalaxmi sarathkumar (@varusarath) January 25, 2020
மேலும், ‘என் மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என் அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றி என என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். என் நல்லது கெட்டதுக்கு நடுவில் என் கூடவே இருந்த எனது ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கும், என் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 25 படங்களை முடித்ததை நான் ஆசிர்வாதமாக உணர்கிறேன். என்னுடன் இருந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகள்.
என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனது சிறந்த நடிப்பைத் தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்ககைத் தர என்னை அர்ப்பணிப்பேன். என் மீது தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும். தொடர்ந்து கனவு காணுங்கள். உங்களால் முடிந்த அத்தனை அன்பையும். மகிழ்ச்சியையும் பரப்புங்கள்’. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த சாதனைக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
�,”