நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு நவீனமான தமிழ் சினிமா ரசிகர்கள் நாகரிகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களைப் போன்றே இருந்து வருகின்றனர்.
சென்னை அணிக்காகப் பல்வேறு மாநிலம், வெளிநாட்டு வீரர்கள் வணிக அடிப்படையில் விளையாடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததால் அவர் கேப்டன் ஆனார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் கொடுத்தனர். ஆனால், இதை அஜித்குமார் ரசிகர்கள் ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் தல என்றாலே சினிமாக்காரர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகர் அஜித்குமார் தான். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கி, அதிலும் சென்னை அணிக்காக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி, வெற்றிக் கோப்பையையும் வாங்கிக் கொடுத்ததால் ரசிகர்கள் அவரை தல தோனி என அன்பாக அழைக்கத் தொடங்கினர்.
அதன் பின்னர் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தல என்றாலே தோனி தான் என்று நினைக்க தொடங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே அஜித் ரசிகர்களை இச்சம்பவம் அதிருப்திக்கு உள்ளாக்கியது
இந்த நிலையில்தான் கடந்தாண்டு பிளேஆஃப் கூட செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பாண்டில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதிலும் டெல்லிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி பழைய பார்முக்கு திரும்பி, தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமானார்
இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்தனர்.
அப்போதுதான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தல தோனி என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.
இதைக் கண்ட அஜித் ரசிகர்கள் தனுஷை சமூக வலைதளங்களில் வசைபாடினர். அடுத்ததாக அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தன்னை தல ரசிகன் என அடையாளப்படுத்திக்கொண்டு, ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் நடிகர் சிம்புவும் தல தோனி என குறிப்பிட்டு பாராட்டினார்.
இது அஜித் ரசிகர்களை மேலும் கொதிப்படையச்செய்தது. பொங்கியெழுந்த அஜித் ரசிகர்கள் தனுஷ் மற்றும் சிம்புவை வசைபாடி நன்றி கெட்ட எலும்பன் தனுஷ், நன்றி கெட்ட நாய் சிம்பு என ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் உள்ளிட்ட பிற நடிகர்களின் ரசிகர்கள் ஆமை அஜித்குமார் எனப் பதிலடி கொடுக்கும் வகையில் டிரெண்டிங்கை உருவாக்கியுள்ளனர்.
அஜித்குமார், விஜய், தனுஷ், சிலம்பரசன் என நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் எனப் பலமுறை அறிவுறுத்தியும், ரசிகர்களின் இச்செயல் திரையுலகைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு சினிமா பழைய நிலைமைக்குத் திரும்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற நாலாந்தர சண்டைகள் சினிமா ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் கடுமையான எதிர்ப்புணர்வு ஏற்பட காரணமாகிவிடும்.
அதனால் பாதிக்கப்பட போவது ஒட்டுமொத்த திரையுலகமும்தான். அதனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் இதுபோன்ற நாலாந்தர நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
**-இராமானுஜம்**
�,