இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகள் பேச கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதினார்.
அதில், ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சுசி கணேசன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்போது லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது. முடக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை கேட்டு லீனா மணிமேகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அப்போது பாஸ்போர்ட்டை லீனா மணிமேகலையிடம் திருப்பி ஒப்படைக்கும்படி சொன்ன உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு பிறகு இயக்குநர் சுசி கணேசன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
சிறிது நாட்களில் பாடகி சின்மயி தாமாக முன் வந்து சுசி கணேசன் மற்றும் அவரிடம் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதனால் சுசி கணேசன், தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத சின்மயி தன் மீது தேவையில்லாமல் பழி சுமத்துவதாக தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்மயி மீது ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கானது உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, இயக்குநர் சுசி கணேசன் தரப்பில் ஆஜரான வக்கீல், “தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயக்குநர் சுசி கணேசன் மீது தவறான கருத்துகளை கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி பரப்பி வருகின்றனர். இதனால் அவர்கள் சமூக வலைதளங்களில் சுசி கணேசன் பற்றி பேச தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து, கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி ஆகியோர் சமூக வலைதளங்களில் இயக்குநர் சுசி கணேசன் பற்றி பேச தடை விதித்தும், லீனா மணிமேகலையின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூ டியூப் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
**-இராமானுஜம்**
.�,