நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
’டான்’, ‘அயலான்’ படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது படப்பிடிப்பிற்கான பூஜை இன்று தொடங்கியுள்ளது. தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்குகிறது. மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நவீன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி இந்த படத்தை தயாரிக்கிறது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் பைலிங்குவலாக உருவாகும் இந்த படத்திற்கு தமன் பின்னணி இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜூம் இணைய இருக்கிறார், பிரேம்ஜி வருகின்ற 13ம் தேதியில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இவர்கள் தவிர படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். தனுஷ், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அடுத்தடுத்து மற்ற மொழிகளிலும் தங்கள் மார்க்கெட்டை தீவிரமாக்கும் முயற்சியில் உள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
இதற்கு முன்பு இவரது ‘டாக்டர்’ திரைப்படம் ‘வருண் டாக்டர்’ என தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கு நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**