குறையே சொல்லாம சாப்பிடப் பழகணும் : அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘ஊர் உலகத்தில எவ்வளவுதான் பிரச்னை இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமையில கறி சோறு சாப்பிடலன்னா மனசுக்கு நிம்மதியே கிடைக்க மாட்டேங்குதும்மா’ன்னு சொல்லிகிட்டே மத்தியான சாப்பாட எடுத்து வாயில வச்சேன். சமைக்கும் போது அம்மா குழம்புல உப்பு போட மறந்திட்டாங்க போல. நாசுக்கா சொல்லலாமேன்னு கூப்பிட்டு ‘டேஸ்டே தெரியல அம்மா’ன்னு சொன்னா, ‘அய்யோ, அம்மா’ன்னு பயந்து போய் கத்துறாங்க. ‘என்னம்மா ஆச்சு?’ன்னு கேட்டா, ‘வாசனை, டேஸ்ட் எல்லாம் தெரியாம இருக்குற கூட கொரோனாவுக்கு அறிகுறியாம்பா, நியூஸ்ல சொன்னாங்க. சீக்கிரமா ஹாஸ்பிட்டல் போலாம்’ன்னு சோகமா சொல்றாங்க. ‘கொரோனா ட்ரீட்மென்ட் எல்லாம் வேண்டாம் அம்மா. இப்போ கொஞ்சம் உப்பு மட்டும் கொடுங்க’ன்னு சொன்னேன். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அம்மாவ சமாதானம் பண்ணிட்டு வர்றேன்.

**மாஸ்டர் பீஸ்**

பெண்கள் எதிர்ல வந்தா பார்த்திடக்கூடாதுனு கவனமா இருப்பேன்!

அப்புறம்,

பார்த்தத காட்டிக்க கூடாதுனு கவனமா இருப்பேன்!!!

**ச ப் பா ணி**

நுரை என்பது டீ க்கான

ஆடம்பரம்.!

**மனமே வசப்படு**

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல

எண்ணங்களைக் கொண்டு

எண்ணங்களை வெல்ல வேண்டும்.

**முகவைக்காரன்**

தோல்வியை ருசித்தவன் எந்த ஒரு

ஆரவாரம் இல்லாமல் வெற்றியை

ரசிக்கிறான்.!

**Harithranadhi Raja Anvar**

அண்ணே… இந்த சப்பாத்திக்கும் புரோட்டாவுக்கும் என்னண்ணே வித்தியாசம்…

அடேய்.. சப்பாத்தி GST போடுறவங்க சாப்பிடுறது,

புரோட்டா GST அதிகமாக கட்றவங்க சாப்பிடுறது..

அவ்வளோதான்!

**இதயவன்**

தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் காா்டு பணியிடங்களுக்காக நடைபெற்ற பொதுவான போட்டித் தோவில் 5 தமிழா்கள் மட்டுமே தேர்வு

தமிழ்,தமிழர்கள் அல்லாத இந்தியா தான் புது இந்தியாவோ?!!!

**mohanram.ko**

மாவை நல்லா பிசைஞ்சி,நத்தை உடம்பு மாதிரி அதை சுருட்டி வச்சி, அதை அப்படியே கடப்பா கல்லுல தீத்தி, தோசை கல்லுல போட்டு, ஒண்ணு பிரிச்சி சாப்பிட்டா உள்ள அடுக்கடுக்கா வர மாதிரி ஒரு சப்பாத்தி எடுத்துகிட்டு வா

அண்ணனுக்கு 18% ஜிஎஸ்டி யோட பரோட்டா ஒண்ணு

**உள்ளூராட்டக்காரன்**

நேபாளத்துக்கு தக்க பதிலடி கொடுத்துட்டோம்.

எப்படி?

எங்க ஏரியா கூர்க்கா இன்னைக்கு காசு கேட்டு வந்தான்… காசு கொடுக்கல

**போஸ்பாண்டி**

உலகம் நிரந்தரமானது

உலகில் வாழும் மனித உறவுகள் மட்டுமே நிரந்தரமானது இல்லை .

**மருத்துவர் பால. கலைக்கோவன்**

*நுரையீரல் சிறப்பு மருத்துவர்- கடலூர்*

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் மறைவை ஒட்டி, பலரும் என்னிடம் கேட்ட கேள்விகள்:

“அவரை காப்பாற்றி இருக்க ஏதாவது வழி இருந்ததா? “

“எவ்வளவு பணம் செலவு செய்தாலும் கொரோனாவிடம் இருந்து உயிரைக் காப்பாற்ற முடியாதா??”

“அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை வைக்கலாமா?

“வென்டிலேட்டரில் போடப்பட்டால் காப்பாற்றவே முடியாதா?

அந்த கேள்விகளுக்கான எனது பதில்:

பொதுவாக நுரையிரல் பஞ்சு போன்ற மென்மையும் ,ரோஜாப்பூ இதழ் நிறத்திலும் இருக்கும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் நுரையீரல் கல் போன்று இறுகி இருப்பதைக் காணலாம். நுரையில் இவ்வாறு மாறுவதால் வழக்கமாக நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் செல்ல வழியில்லாமல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விரைவில் இறந்து விடுகிறார்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் வென்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) பொருத்தப்பட்டாலும் , நுரையீரலின் தன்மை கல் போன்று இறுகி காணப்படுவதால் பயன்தராது! அப்படியானால் இந்த நபர்களை காப்பாற்றவே முடியாதா என்கிற உங்களின் கேள்வி நியாயமானது தான். நிச்சயம் காப்பாற்ற முடியும்,

அதற்கு சில அளவுகோல்கள் உண்டு. உதாரணமாக பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவருக்கு உள்ள மற்ற நோயின் தன்மை, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம், சிறுநீரக +கல்லீரல் செயல்பாடுகள், எலும்பு தேய்மானம் போன்றவற்றைப் பொறுத்து அவரை காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகமாகும். இவை அனைத்தும் ஒத்து வந்தாலும் கூட, செயற்கை சுவாசம் (VENTILATOR) மட்டுமே போதாது.

ECMO(எக்மோ) என்று சொல்லப்படுகின்ற, EXTRACORPOREAL MEMBRANE OXYGENATOR என்ற கருவி மிக மிக அவசியம். இந்தக் கருவி தான் நுரையீரல் செய்கின்ற அதிக தொழில்நுட்ப வேலையை செம்மையாக செய்யும். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இறுதியாக பொருத்தப்பட்டதும் இதே கருவிதான். இந்தக் கருவியின் ஒருநாள் உபயோக கட்டணம் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல். (தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மூன்று ECMO கருவிகள் உள்ளன)

ECMO கருவியும் ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டும் தான். நுரையீரலை சரி செய்வதற்கான வாய்ப்பை/நேர அவகாசத்தை அது வழங்கும். பத்து நாள் முதல் 40 நாளைக்குள் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைகளை முழுமையாக சரி செய்துவிட்டால், ECMO மூலம் ஒருவரை காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உண்டு. அதற்குமேல் வாய்ப்புகள் மிக மிக குறைவு ( எனது அனுபவத்தில்)

மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் Rela அவர்களை தொடர்புகொண்டு இதைப்பற்றி கூறினேன் (திரு அன்பழகன் அனுமதிக்கப்பட்ட ரேலா மருத்துவமனையின் இயக்குனர்)

அவரும் இந்தக் கருத்தை ஆமோதித்தார். திரு அன்பழகன் அவர்களுக்கு ECMO கருவி பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்றிருப்பதாகவும் கூறினார்.

நான் மேலே குறிப்பிட்ட அளவு கோல்களின் படி, திரு அன்பழகன் அவர்களின் வயது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டது, நாள் பட்ட பிற மருத்துவ நோய்கள், சில பழக்கவழக்கங்கள் போன்றவை அவருக்கு ஏதுவாக இல்லை. அதனால் அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 20 வயது பெண்ணிற்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது (Double #LungTransplant -June 11,2020). அமெரிக்காவை சேர்ந்த அந்த நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் பெண் நலமுடன் ICU வில் உள்ளார்.

எனவே நவீன மருத்துவத்தால் ஒரு உயிரை எப்பேற்பட்டாலும் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அந்த பழக்கவழக்கங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

உடல் பருமன், அதிகமான குறட்டை, சர்க்கரை நோய் போன்றவைகளும் பின்னடைவை ஏற்படுத்தும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற காலங்களில், வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அடுத்து வரப்போகின்ற இரண்டு வாரங்கள் தான் தமிழகத்தில் , கொரோனா உக்கிர தாண்டவம் ஆடப்போகிறது. எனவே நம்மையும் நம் சுற்றத்தாரையும் கவனமாக பார்த்துக் கொள்வோம். நுரையீரல் நலனைப் பேணுவோம் !

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share