நடிகையும், பாடகியும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் ஜனவரி 27. இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாகச் சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்கள் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் கூறுகிறார்
இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் சமூகத்தில் பிரபலமான செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்த தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிக்கப் போவதாகவும், நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களைப் பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபட விரும்புவதாகவும் கூறுகிறார்.
மேலும் அவர், ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன, ஆனால் என்னைப் பொறுத்தவரைக் கொண்டாட்டம் என்பது, நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும். இது குறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும், உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களைக் குறித்து அவர்களைச் சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று கூறியுள்ளார்.
**-இராமானுஜம்**
�,