இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜூலை 28) இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அறிமுகப் போட்டியில் களமிறங்கிய கெய்க்வாட் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து மற்றோர் அறிமுக வீரர் படிக்கல் களமிறங்கினார். கேப்டன் தவான் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர்.
17.2 ஓவரில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து இருந்தது. இந்த நிலையில் தனஜெயா – கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19ஆவது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுகப் பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜூலை 29) இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.
**-ராஜ்**
.�,