‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தில் நடிகராக தன்னுடைய அனுபவத்தை இயக்குநர் செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.
‘ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சாணிக்காயிதம்’. இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வாரம் 6ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
‘புதுப்பேட்டை’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ’மயக்கம் என்ன’ போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ள எழுத்தாளரும் இயக்குநருமான செல்வராகவன் இந்தப் படத்தில் சங்கையா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகராக இயக்குநர் செல்வராகவன் முன்பு நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் முதலில் வெளியானாலும் அவர் நடிகராக ஒப்புக்கொண்ட முதல் திரைப்படம் சாணிக்காயிதம் ஆகும். இந்தப் படத்தில் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குநராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை ’சாணிக்காயிதம்’ சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.
ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’சாணிக்காயிதம்’ மே 6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.
**ஆதிரா**
‘சாணிக்காயிதம்’: அனுபவம் பகிர்ந்த செல்வராகவன்
+1
+1
+1
+1
+1
+1
+1