கொரோனா அச்சம் காரணமாக தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி திரைப்படங்கள் வெளிவர முடியாமல் உள்ளது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்றிருந்த நிலையில் இதுவரை படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்படவில்லை. இது எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய், மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் மாளவிகா வீடியோ காலில் பேசியதன் ஸ்கிரீன் ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலில் இடம்பெற்ற, ‘பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ..கொஞ்சம் சில் பண்ணு மாப்பி’ என்ற வரிகளைக் குறிப்பிட்டு ‘ஹேங் அவுட் செய்ய முடியாத சூழலில் எங்கள் ஹேங் அவுட் இப்படித்தான் இருக்கும். நாங்கள் சமூக விலகலில் இருக்கிறோம். நீங்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”