தெலுங்கிலிருந்து வந்த பாகுபலி இந்தியாவையே அதிரடித்ததுபோல, கன்னட சினிமாவிலிருந்து பெரிய வெற்றியைப் பெற்றது கே.ஜி.எஃப். நடிகர் யஷ் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியானது.
கோலார் தங்க சுரங்கத்தைக் கையகப்படுத்தி அதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய எதிரியுடன் மோதும் குட்டி டானின் கதையே ‘கே.ஜி.எஃப்’. படத்தின் ஹைலைட்டே ராக்கியின் வளர்ச்சி தான். சீனுக்கு சீன் மாஸ் காட்டி படத்தை வேற லெவலுக்கு எடுத்து வைத்திருப்பார்கள். ‘யாரோ பத்து பேர அடிச்சு டானாகலை, நான் அடிச்ச பத்து பேருமே டானுங்க’ மாதிரியான வசனங்களே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி பெரிய ஹிட்டானது. இப்போது, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ படத்துக்கு வெறித்தன வெயிட்டிங்.
கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டியது, கொரோனாவினால் படப்பிடிப்பே நடத்தமுடியாமல் போய், படமும் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது. ஏனெனில், ஜனவரி 8ஆம் தேதியான நாளை நடிகர் யஷ் பிறந்த தினமென்பதால், இந்த டீஸர் ரிலீஸ் திட்டம்.
இந்திய சினிமாவாக படம் மாறிவிட்டதால், இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உள்ளிட்ட நடிகர்களை திரைக்குள் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். முதல் பாகத்தில் அதீரா கேரக்டரின் முகத்தை காட்டியிருக்கமாட்டார்கள். அந்த கேரக்டரில் தான் சஞ்சய் தத் நடிக்கிறார். கிரேஸியான ஒரு கேரக்டராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதீரா கேரக்டருக்காக சஞ்சய் தத்துக்கு ஒன்றரை மணிநேரம் மேக்கப் மட்டும் போடவேண்டி இருந்ததாம். பயங்கரமான ஒரு வில்லனாக சஞ்சய் தத், அதிரடி நாயகனாக யஷ் இருவரும் க்ளைமேக்ஸில் சண்டை போடும் காட்சிகளை வழக்கம் போல சீரியஸாக எடுத்து வைக்காமல், நகைச்சுவை கலந்த ஃபேண்டஸியாக எடுத்திருக்கிறார்களாம்.
அதுபோல, அரசியல் தலைவர் கேரக்டரான ராமிகா சென் ரோலில் ரவீணா டாண்டன் நடித்திருக்கிறார். படத்தின் திசைமாற்றியாக இந்த கேரக்டர் இருக்குமாம். அதோடு, பவர்ஃபுல்லான ஒரு ரோல் என்று சொல்கிறார்கள். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மனதில் கொண்டு இந்த ரோல் உருவாகியிருப்பதாக ஆஃப் தி ரெக்கார்ட்டில் ஒரு தகவல். ஆக, கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் டீஸர் நாளை காலை 10.18 மணிக்கு வெளியாக இருக்கிறது.
**-ஆதினி**�,