‘
சர்கார் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால் சர்கார் படத்தில் இலவசப் பொருட்களைத் தவறாக விமர்சித்துள்ளதாக காவல்துறையில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அரசின் இலவசப் பொருட்களை வீசுவது போல காட்சி அமைத்தது தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று (ஜூலை 26) நடைபெற்றது.
அப்போது இவ்வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தணிக்கை செய்த திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார்.
**-இராமானுஜம்**
�,