நடிகர் கார்த்தியின் முதல் திரைப்படமான ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் ‘பருத்தி வீரன்’. கடந்த 2006ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கார்த்தி நடிகராக அறிமுகமான முதல் திரைப்படம் இது.
முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு நல்ல வரவேற்பை இந்த படம் கொடுத்தது. பல விருதுகளையும் இந்த படம் பெற்று தந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ”பருத்திவீரன்’ படம் மூலமாக என்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியதற்கு உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன். அந்த படத்தில் என்னுடைய நடிப்பும் ஒவ்வொரு அசைவும் அமீர் சார் எனக்கு கற்று கொடுத்தது தான். இந்த நடிப்பின் மூலம் கிடைத்த புகழ் அனைத்தும் அவரையே சாரும். அதற்கு பிறகு நிறைய படங்கள் நான் கற்று கொண்டாலும், அந்த படத்தில் நான் மிகவும் விரும்பி வேலையை மகிழ்ச்சியாக செய்ய கற்று கொண்டேன்.
அமீர் சார், ஞானவேல் அண்ணா, என்னுடைய ரசிகர்கள், ஊடகத்துறை நண்பர்கள் என அனைவருக்கும் இந்த அழகான பாதையை அமைத்து கொடுத்ததற்கு என்னுடைய நன்றி” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களும் கார்த்திக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
**ஆதிரா**