லண்டன் காவல்துறை பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியதற்காக உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவம்பர் 13) அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதனால் போர் நிறுத்தம் வேண்டியும், பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் நாடுகளுக்கு ஆதரவாகவும் பல நாடுகளில் பேரணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் லண்டனில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் காசாவில் போர் நிறுத்தம் வேண்டியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியின் போது வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோரை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் லண்டன் காவல்துறை பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரது கருத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சுயெல்லா பிராவர்மேன் குற்றச்சாட்டை முன்வைத்து ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தது.
கடும் நெருக்கடியின் காரணமாக சுயெல்லா பிராவர்மேனை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் க்ளெவர்லி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!
சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?